கவிஞர் பிரபாகரபாபு
காலைஇளம் பரிதிவரும் அழகைக் கண்டேன்
கருப்புதிர்ந்து மெலிதாகக் கரையக் கண்டேன்
வேளைசுப வேளைஎன வண்ணம் தீட்டும்
விந்தையினைக் கண்டிறைவன் வித்தை கண்டேன்
சோலையது பணியில்முகம் கழுவிக் கொண்டு
சுந்தரமாய்ச் செண்டுகளாய்ச் சிரிக்கக் கண்டேன்
நாளையொரு வேளைவரும் என்றே நம்பி
நாட்டியமாய்ப் பூங்கொடிகள் நெளியக் கண்டேன்
தென்றலுடன் குலவுகின்ற குயில்கள் கண்டேன்
தாவிமரப் பூக்கொறிக்கும் அணில்கள் கண்டேன்
அன்றலர்ந்த வாழைஇலைக் கோட்டில் கிளிகள்
அவசரமாய்ச் செய்திகளைப் படிக்கக் கண்டேன்
ஒன்றிரண்டு மைனாக்கள் உரக்கக் கூவி
உயர்ந்துவரும் கதிர்களினை எண்ணக்கண்டேன்
வென்றுவிடும் கண்ணுருட்டி வெகுண்டாற் போல
வெப்பமுடன் கதிரவனின் வருகை கண்டேன்
சூழ்ந்திருந்த இருள்கூட்டம் சொல்லா மலே
சுடர்கண்டு தோற்றோடிச் சரியக் கண்டேன்
தாழ்ந்திருந்த புதுவெள்ளி வானில் கோலம்
தங்கமென மெருகேறித் தவழக் கண்டேன்
வீழ்ந்திருந்த உடற்கூட்டம் விழித்துக் கொண்டு
விடிவுகளில் நாட்டமுடன் விரையக் கண்டேன்
ஆழ்ந்திருந்த கருமையது அகன்றாற் போலே
அறியாமை அகன்றாலே உலகம் வாழும்!